உக்ரைனுக்கு மேலும் ரூ. 3,260 கோடி மதிப்பில் ராணுவ உதவி!
உக்ரைன் நாட்டிற்கு மேலும் 400 மில்லியன் டாலர்( ரூ. 3,260 கோடி) மதிப்புள்ள ஆயுத உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்து ஓராண்டை கடந்துவிட்டது.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல வகைகளில் உதவி வருகின்றன.
அந்தவகையில் அமெரிக்கா, உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. போரின் இடையே உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, ஒருமுறை அமெரிக்கா சென்று ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். அதுபோல சமீபத்தில் ஜோ பைடனும் திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 3,260 கோடி ஆகும்.
இதையும் படிக்க | ஜோ பைடனுக்கு புற்றுநோய் சிகிச்சை இனி தேவையில்லை: வெள்ளை மாளிகை!