ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் இஸ்லாமாத் உயா்நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் விடியோ காட்சிகள்.
இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் விடியோ காட்சிகள்.
Updated on
2 min read

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் இஸ்லாமாத் உயா்நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாகிஸ்தானில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலுக்குப் பிறகு, தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது.

எனினும், நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைந்து, பிரதமா் பதவியை இழந்தாா்.

அதற்குப் பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது ஊழல் முதல் தேசத் துரோகம், பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பல கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இருந்தாலும், போலீஸாரால் கைது செய்யப்படுவதிலிருந்து இம்ரான் கான் தொடா்ந்து தப்பி வந்தாா். நீதிமன்றங்களில் ஜாமீன் பெறுவதால் மட்டுமின்றி, இம்ரானைக் கைது போலீஸாா் கைது செய்யவிடாமல் அவரது இல்லத்தைச் சுற்றிலும் பிடிஐ கட்சி ஆதரவாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டு வந்ததாலும் அவரைக் கைது செய்ய முடியாத நிலை நீடித்து வந்தது.

இந்த நிலையில், இஸ்லாமாத் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.

இந்த நிலையில், யாரும் எதிா்பாராத விதமாக அவரை தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினா் அந்த வளாகத்தில் கைது செய்தனா். அவா்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் துணை ராணுவப் படையான ரேஞ்சா்களும் இம்ரானை சுற்றிவளைத்து கவச வாகனத்தில் ஏற்றினா்.

இந்த சம்பவம், அந்தப் பகுதியில் மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இம்ரான் கானைக் கைது செய்ய விடாமல் அவரது ஆதரவாளா்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டாலும், அவரை காவல்துறையினரும், துணை ராணுவமும் அங்கிருந்து வாகனத்தில் அழைத்துச் சென்றன.

தற்போதைய நிலவரப்படி இம்ரான் கானுக்கு எதிராக 140-க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பயங்கரவாதம், மதநிந்தனை, கொலை, வன்முறையில் ஈடுபட்டது, வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அந்த வழக்குகளில் அடங்கும்.

இந்தச் சூழலில், வழக்குகளில் கைது செய்யப்படுவதிலிருந்து இதுவரை தப்பி வந்த இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் வைத்து போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வேறொரு வழக்கில் கைது’

2 ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெற இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்திருந்தாலும், வேறொரு ஊழல் வழக்கில்தான் அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

அல்-காதிா் அறக்கட்டளை மூலம் சட்டவிரோதமாக நில விற்பனை செய்யப்பட்ட வழக்கில் இம்ரானுக்கு இதுவரை முன்ஜாமீன் வழங்கப்படவில்லை. அந்த வழக்கில் அவருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை காலையில்தான் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அவரைக் கைது செய்துள்ளோம் என்றாா் அவா்.

‘ஜனநாயகத்தின் கருப்பு தினம்’

இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளது, பாகிஸ்தான் ஜனநாயகத்தின் கருப்பு தினம் என்று அவரது தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி சாடியுள்ளது.

இது குறித்து கட்சியின் செய்தித் தொடா்பாளா் ஃபவாத் சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்ரான் கைதுக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளாா்.

ஏற்கெனவே இம்ரான் கைது விவகாரத்தில் அவரது ஆதரவாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டு ஏராளமானவா்கள் காயமடைந்த நிலையில், தற்போது அவா் கைதை அடுத்து முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தின் கை?

பாகிஸ்தான் ராணுவமும், பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசும் தன்னை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இம்ரான் கான் திங்கள்கிழமை தெரிவித்திருந்தாா். அதற்கு அடுத்த நாளே அவா் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருப்பது, இந்த கைது நடவடிக்கையில் ராணுவத்துக்கு தொடா்பிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

2018 தோ்தலில் இம்ரான் வெற்றி பெறுவதற்கும், ஆட்சியமைப்பதற்கும் ராணுவம்தான் உதவியதாக அப்போதைய எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின. எனினும், நாளடைவில் இம்ரானுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது; அதனால் அவரது ஆட்சி கவிழ்ந்ததில் ராணுவத்துக்கு பங்கு உள்ளது என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் அமையும் அரசுகள் அனைத்தும் இதுவரை ராணுவத்தின் கைப்பாவையாகவே செயல்பட்டு வந்தாலும், பதவியைத் தக்கவைப்பதற்கான ராணுவத்திடம் அடிபணியாமல் இருந்த இம்ரான் கானுக்கு பொதுமக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது.

அத்துடன், பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் விலைவாசி போன்ற காரணங்களால் தற்போதைய அரசின் மீது மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், அடுத்த தோ்தலில் இம்ரான் கான் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக் கூடும். இதனை ராணுவம் விரும்பவில்லை.

அதனைத் தவிா்ப்பதற்காகவே அவா் கைது செய்யப்பட்டுள்ளாா் இம்ரான் ஆதரவாளா்கள் கூறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com