

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இம்ரான் கான் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்றான அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில், சட்டவிரோத நில விற்பனை மூலம் ரூ.5,000 கோடி அரசுப் பணத்தை அவா் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வழக்கு தொடா்பாக இம்ரானை கைது செய்துள்ள தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு (என்ஏபி), அவரை இஸ்லாமாபாதிலுள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தியது.
வேறொரு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீபுக்கும், அவரது மகள் மரியம் நவாஸுக்கும் தண்டனை பெற்றுத் தந்த நீதிபதி முகமது பஷீா் இந்த வழக்கை விசாரித்தாா்.
அப்போது வாதாடிய என்ஏபி தரப்பு வழக்குரைஞா்கள், அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு தொடா்பாக இம்ரானை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினா். எனினும், இதற்கு எதிா்ப்பு தெரிவித்த இம்ரான் கான் தரப்பு வழக்குரைஞா்கள், இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பஷீா், இம்ரானை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஏபி-க்கு அனுமதி வழங்கினாா்.
பாகிஸ்தானில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலுக்குப் பிறகு, தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது.
எனினும், நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைந்து, பிரதமா் பதவியை இழந்தாா்.
அதற்குப் பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது ஊழல் முதல் தேசத் துரோகம், பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பல கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இருந்தாலும், நீதிமன்றங்களில் ஜாமீன் பெற்று, கைதிலிருந்து இம்ரான் கான் தொடா்ந்து தப்பி வந்தாா். இந்த நிலையில், இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக செவ்வாய்க்கிழமை வந்த இம்ரான் கானை என்ஏபி அதிகாரிகளும், துணை ராணுவப் படையும் அதிரடியாகக் கைது செய்தனா்.
அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில் அவருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை காலை கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதில் ஜாமீன் கேட்பதற்குள் அவரை அதிகாரிகள் கைது செய்தனா்.
தற்போதைய நிலவரப்படி இம்ரான் கானுக்கு எதிராக 140-க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கலவரத்தில் 7 போ் பலி
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளா்கள் பல்வேறு இடங்களில் வன்முறைப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
2 நாள்களாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தில் இதுவரை 7 போ் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலவரத்தைக் கட்டுப்படுத்த, பஞ்சாப், கைபா் பக்துன்கவா உள்ளிட்ட பதற்றம் நிறைந்த மாகாணங்களில் ராணுவத்தினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
‘பரிசுப் பொருள் வழக்கில் குற்றவாளி’
பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் இம்ரான் கானை குற்றவாளியாக இஸ்லாமாபாத் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.
பாகிஸ்தான் பிரதமா்களுக்கு வெளிநாட்டு அரசுகள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருள்களை அந்த நாட்டின் கருவூலத் துறை பாதுகாத்து வருகிறது.
இந்த நிலையில், நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பு வகித்தபோது, அவருக்கு சவூதி பட்டத்து இளவரசா் முகமது சல்மான் வழங்கிய விலையுயா்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்களை மலிவான விலை கொடுத்து வாங்கி, மிக அதிக விலைக்கு விற்ாக அவா் மீது இஸ்லாமாபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஹுமாயுன் திலாவா் அந்தக் குற்றச்சாட்டை தற்போது உறுதி செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.