அமெரிக்காவின் தேசிய உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேல்- பாலஸ்தீன போர் 34-வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில் உலகளவில் அதிகாரிகள், தலைவர்கள் சந்திப்பு நடந்து வருகின்றன.
ஜி7 நாடுகளின் கூட்டறிக்கை நேற்று (நவ.8) வெளியிடப்பட்ட நிலையில் இன்று (நவ.9) பிரான்ஸில் சர்வதேச மனிதத்துவ மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வில்லியம் பர்ன்ஸ் மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்டு வருகிற பேச்சுவார்த்தை பிணைக்கைதிகளின் விடுவிப்பை மையமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக இஸ்ரேலுக்குச் சென்ற அவர், அங்குள்ள உளவு அமைப்பு மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
எகிப்து மற்றும் கத்தார் பயணத்தில் உள்ள வில்லியம், ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இடையீட்டாளராகச் செயல்படும் கத்தாரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல், மூன்று நாள் போர் இடைவெளியை அளிப்பதற்குப் பதிலீடாக 10 முதல் 15 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அவர் முன்வைக்கும் கோரிக்கை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் கொண்ட சிஐஏ இயக்குநரான வில்லியமின் பேச்சுவார்த்தை கைக்கொடுக்கும் என நம்பப்படுகிறது.