மனிதநேய அடிப்படையிலான தற்காலிக போர் நிறுத்த முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என ஐநாவின் இந்திய தூதர் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்
47-வது நாளாக இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடர்ந்து வருகிறது. ஐநா பொது அவையின் கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பில் ஐநாவிற்கான நிரந்த இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பேசும்போது, இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பேசியுள்ளார்.
சர்வதேச கூட்டமைப்புகளால் மேற்கொள்ளப்படும் போர் வீரியத்தைத் தணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா வரவேற்பதாகவும் உடனடி வாழ்வாதார தேவைகள் பாலஸ்தீன மக்களுக்கு சென்று சேர்வதை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
“பயங்கரவாதம் எந்தவிதத்தில் இருந்தாலும் அதனை உறுதியாக எதிர்க்கிறோம். சர்வதேச சட்டத்தைக் கடைபிடிப்பதையும் வன்முறைக்கு எதிராகவும் நிற்கிறோம். போர் விரிவடைவதைத் தடுப்பதும், வாழ்வாதார பொருள்கள் கிடைக்கச் செய்வதும் பிணைக்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவும் வேண்டும். அமைதியும் நிலைத்தன்மையும் உருவாக அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்” எனப் பேசியுள்ளார் ருசிரா கம்போஜ்.
இதையும் படிக்க: தற்காலிக போர் நிறுத்தம்?
முன்னதாக, இந்தியா 70 டன்கள் அளவுக்கு வாழ்வாதாரப் பொருள்களை அனுப்பியது. அவற்றில் 17 டன்கள் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாழ்வாதார பொருள்கள் இந்தியா சார்பில் தொடர்ந்து அனுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.