ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று, செவ்வாய்கிழமை (நவ.20) அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் “போர் நிறுத்தத்துக்கான உடன்படிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்குமிடையே பேச்சுவார்த்தை மேற்கொள்பவர்கள், 240 பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோரியுள்ளனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்.7 அன்று நடத்திய தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகினர்.
அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் 47-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. ஹமாஸை வேரொடு அழிக்கும் முடிவில் இஸ்ரேல் தொடர்தாக்குதல் நடத்தி வருகிறது.
போரில் இஸ்ரேலின் தாக்குதலில் 13.300-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகக் காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருதரப்புக்குமிடையே கத்தார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.
திங்கள்கிழமை (நவ.19) அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிணைக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்காலிமான உடன்படிக்கை இருதரப்புக்குமிடையே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இஸ்ரேல் 5 நாள் போர் நிறுத்தமும், தெற்குக் காஸா உள்பட காஸாவின் பகுதிகளில் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை நிறுத்தவும் அந்த பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் ஆகியோரின் பிணையில் உள்ள 50 முதல் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவர் எனவும் தெரிகிறது.
இதையும் படிக்க: காஸா மருத்துமனையில் தாக்குதல்: 12 போ் உயிரிழப்பு
ராணுவ வீரர்கள் அல்லாத இஸ்ரேலியர்களும் வெளிநாட்டவரும் மட்டுமே விடுவிக்கப்படுவர்.
மேலும், இஸ்ரேல் கைது செய்துள்ள பாலஸ்தீனர்களில் 300 பேரை விடுவிக்க வேண்டும் எனவும் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.