அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவான கன்ஸ் அண் ரோசஸின் பாடகர் ஏஎக்ஸ்எல் ரோஸ் மீது முன்னாள் மாடல் நடிகை ஒருவர் பாலியல் கொடுமை வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
1989-ல் தான் பிரபல பாடகரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதாக அவர் வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் பெண்ட் ஹவுஸ் இதழில் மாடலாகப் பணியாற்றிய ஷீலா கென்னடி (61) மேன்ஹேட்டன் உச்ச நீதிமன்றத்தில் தனக்கு நேர்ந்த உடல், மன மற்றும் பொருளாதார ரீதியான இழப்புகளுக்கு ஈடு கேட்டு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, நியூயார்க் வயது வந்தோருக்கான பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு பாலியல் ரீதியான தொல்லையால் பாதிப்படைந்தவர்கள் குற்றம் நிகழ்த்தியவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கும் இந்தச் சட்டம் இன்று (வியாழக்கிழமை) முதல் காலாவதியாகவுள்ள நிலையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இசைக் கலைஞர் ரோஸ் தரப்பு வழக்குரைஞர் ஆலன் எஸ். குட்மேன் பேசும்போது, “இப்படியொரு நிகழ்வு நடக்கவே இல்லை. நியூ யார்க் சட்டம் காலாவதியாவதற்கு ஒருநாள் முன்னதாக இந்த வழக்குப் புனைவாகத் தொடரப்பட்டுள்ளது. ரசிகர் என்பதால் புகைப்படம் எடுத்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதை ரோஸ் மறுக்கவில்லை எனினும் வழக்கு தொடுத்தவர் தெரிவித்த நிகழ்வு குறித்து ரோஸுக்கு எந்தவித நினைவும் இல்லை. இதுகுறித்து முன்னர் அவர் கேள்விப்பட்டதும் இல்லை. இந்த வழக்கு அவருக்குச் சாதகமாக முடியும் என்பதில் சந்தேகமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் மேன்ஹேட்டன் கிளப்பில் 1989-ம் ஆண்டில் பிப்ரவரியில் இரவு விடுதியொன்றில் தன்னைப் பாடகர் ரோஸ் சந்தித்தாகவும் அதன்பிறகு தன்னை அறைக்கு அழைத்ததாகவும் ஷீலா கென்னடி தெரிவித்துள்ளார்.
அறையில் மற்றுமொரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட முயன்ற பாடகர் பின்னர் கோபமுற்று அந்தப் பெண்ணை வெளியேற்றியுள்ளார். ஷீலாவின் சம்மத்தைக் கேட்காமல் அவரைக் கட்டி வைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது கடும் மனரீதியான அழுத்தத்தைக் கொடுத்ததோடு அவரால் தனது மாடலிங் பணியில் தொடர இயலாத நிலையையும் உண்டாக்கியது.
ஷீலா கென்னடி 2016-ல் வெளியிட்ட தனது நினைவு குறிப்புப் புத்தகத்திலும் 2021-ல் வெளிவந்த ‘லூக் அவே’ என்கிற இசைத் துறையில் பெண்களுக்கு நிகழ்கிற பாலியல் ரீதியான வன்முறைகள் குறித்த ஆவணப்படத்திலும் இதனை முன்னர் குறிப்பிட்டுள்ளார்.
பாடகர் உள்பட இன்னும் பிரபலங்கள் பலர் மீது இந்தச் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.