பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்
அதிகளவில் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்(டிடிபி) மற்றும் பிற பயங்கரவாத இயக்கங்கள் ஆகியவை பயங்கரவாத தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (நவ. 22) பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் வடமேற்கு பாகிஸ்தானின் வடக்கு வஸிரிஸ்தான், தெற்கு வஸிரிஸ்தான் மற்றும் பஜௌர் ஆகிய மாவட்டங்களில், நான்கு வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் இரு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தில் ராஸ்மக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 34 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வல்லுறவு: பிரபல பாடகர் மீது வழக்கு!
மற்றொரு சம்பவத்தில், தெற்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தின் வானா பகுதியில் உள்ள ஒரு கடையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல, பஜௌர் மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில், உள்ளூர் ஜாமியாத்-உலெமா-இ-இஸ்லாம்(ஜேயுஐ-எப்) தலைவரின் தந்தை உள்பட மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தநிலையில், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில், பயங்கரவாதிகளை வேரறுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.