ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9.26 மணிக்கு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
ஏற்கனவே நிலநடுக்க பாதிப்பால் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹெராத் நகருக்கு வடமேற்கில் 40 கி.மீ. தொலைவில் கடந்த வாரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகள் எனப் பதிவான அந்த நிலநடுக்கத்தால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன.
அதைத் தொடர்ந்து அக்டோபர் 11-ஆம் தேதி 6.1 என்ற ரிக்டர் அளவிலும், அக்டோபர் 13-ஆம் தேதி 4.6 ரிக்டர் அளவிலும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டன.
தொடர் நிலநடுக்க பாதிப்புகளால் 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மட்டுமின்றி 10,000-த்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.