இஸ்ரேல் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் உள்ளிட்ட 22 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த அக். 7ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது.
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து காஸா மீது தரைவழித் தாக்குதலை மேற்கொள்ளவும் இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது.
இந்த போரில் இதுவரை பாலஸ்தீனியர்கள் 3,785 பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 12,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் தரப்பு கூறியுள்ளது.
அதுபோல, இஸ்ரேலில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 203 பேர் ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | தரைவழித் தாக்குதல் எப்போது? அச்சத்தில் காஸா மக்கள்!
இந்நிலையில் ஹாமஸ் வசம் உள்ள இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டு பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஏற்கெனவே கூறியிருந்தது.
இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் எலி கோஹன் மற்றும் 21 நாடுகளின் தூதரக அதிகாரிகள், தங்கள் நாட்டு மக்களை விடுவிக்க ஹமாஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
பெரு, தன்சானியா, ரஷியா, ருமேனியா, போர்ச்சுக்கல், அர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா, இலங்கை, பிரான்ஸ், மெக்சிகோ, டென்மார்க், ஹங்கேரி, ஆஸ்திரியா, எத்தியோப்பியா, செர்பியா, கொலம்பியா, இத்தாலி, தாய்லாந்து, கனடா, நெதர்லாந்து, போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தூதர்கள் இணைந்து வலியுறுத்தியுள்ளனர்.
காஸாவில் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் 203 பிணைக் கைதிகளில் கிட்டத்தட்ட 30 பேர் குழந்தைகள், 10 பேர் 60 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள், காணாமல்போன 100 பேர் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. மேலும், பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்பதே தங்களின் முதல் முன்னுரிமை என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் பெண் தலைவர் பலி