காபூல் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 4-ஆவது முறையாக மீண்டும் வியாழக்கிழமை(அக்.26) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின் படி, ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை அதிகாலை 1.9 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 150 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவல்லை.
ஏழ்மையின் தேசமான ஆப்கானிஸ்தானை அடுத்தடுத்து தாக்கும் நான்காவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா் மற்றும் ஹெராட்டில் உள்ள 20 கிராமங்களில் 1,983 குடியிருப்பு வீடுகள் அழிந்ததாக தலிபான் தலைமையிலான பேரிடர் மேலாண் அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதைத் தொடா்ந்து, அக்டோபர் 11 -ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் மற்றொரு நிலநடுக்கம் நாட்டையே உலுக்கியது.
முன்னதாக, அக்டோபர் 13 -ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அக்டோபர் 15 -ஆம் தேதி அதேபகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.4 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள், பள்ளிகள் உள்ளிட்டவை இடிந்து விழுந்தன. ஆப்கானிஸ்தானில் அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காயம் குறித்த முழுமையான விவரங்களை தலிபான்கள் இதுவரை வழங்கவில்லை.