போரில் காயமுற்ற இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம், தரைவழி போர் நடவடிக்கையை விரிவுபடுத்திய பின்னர் ஏறத்தாழ 900 பேர் காயமுற்றுள்ளனர். 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
அக்.7 தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போர் பத்து வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில், காஸாவின் போர் முனையில் பணியாற்றும் இஸ்ரேலிய வீரர்கள் காயமுற்று நாட்டுக்குத் திரும்புகிறார்கள். பலர் உடலுறுப்புகளை இழந்துள்ளனர். இந்த இழப்பு அவர்கள் வாழ்க்கை முழுவதும் தொடரவுள்ளது.
இஸ்ரேல், அக்.7 தாக்குதலுக்குப் பிறகு நாடு முழுவதுமிருந்து ராணுவ பணிக்கு 3,60,000 பேரை அழைத்தது.
ராணுவ பணி பெரும்பாலான மக்களுக்குக் கட்டாயமாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டில் வீரர்களின் கதைகள் உணர்ச்சிகரமானவை என அசோசியேட் பிரஸ் தெரிவித்துள்ளது.
முழங்காலுக்குக் கீழே கால்களை இழந்த ஜோனாத்தன் பென் ஹமோ, 22 வயதான இவர் கிரேனட் தாக்குதலில் காயமுற்றவர்.
இதையும் படிக்க: காஸாவில் தரைவழித் தாக்குதல் விரிவாக்கம்: இஸ்ரேல்
இகோர் டுடோரன், வெறும் 12 மணி நேரம் மட்டுமே போர்க் களத்தில் இருந்துள்ளார். இடுப்புக்குக் கீழே ஒரு கால் பகுதி முழுவதையும் இழந்துள்ளார்.
இவர்களுக்கு முறையான மனநல மற்றும் உடல்நல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என ஆர்வலர்கள் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.