மேற்குக் கரை வடக்கே உள்ள துல்கரம் பகுதியில் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் நடத்தியத் தாக்குதலில் மேலும் 5 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக உள்ளூர் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் 21 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தாபெத் மருத்துவமனயின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய வீரர்கள் பயங்கரமான வன்முறை மோதல்களில் ஈடுபடுவதாகவும் பாலஸ்தீன மக்களைக் கைதுசெய்வதற்காகப் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலிய ராணுவம், ஆக்கரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் சோதனையையும் தாக்குதலையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவது தொடர்பாக எந்தக் கருத்தையும் காரணத்தையும் அது தெரிவிக்கவில்லை.
இதுவரை இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஜெனின் நகரில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் பதிவுகளின்படி 2005-க்குப்பிறகு ஒரே சோதனையில் அதிக பேர் கொல்லப்பட்டது இஸ்ரேலின் இந்த தாக்குதலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் 7-ல் போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் இராணுவம் மேற்குக் கரையில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேலானவர்களைக் கைதுசெய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவானவர்கள் என இஸ்ரேல் கூறுகிறது.
ஹமாஸ் அமைப்பு 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றதால் இந்தப் போர் துவங்கியது. இஸ்ரேல் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தத் தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் 11,240 பேரைக் கொன்று குவித்துள்ளது. அதில் 4,630 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல்.