உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது: இஸ்ரேலில் ஜோ பைடன்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஜோ பைடன் - நெதன்யாகு
ஜோ பைடன் - நெதன்யாகு
Published on
Updated on
1 min read


டெல் அவிவ்: இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இஸ்ரேல் - காஸா இடையேயான போர் 12வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார். விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வந்து அதிபரை வரவேற்றார்.

காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். 

இரு தலைவர்களும் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன், உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிற ஜனநாயக நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. மேலும் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை இஸ்ரேல் தரப்பிலும் பார்க்கிறார்கள், ”என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

காஸா பகுதியில் இருந்த மருத்துவமனை மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மிகவும் வருத்தமும் அதிருப்தியும் அடைந்தேன். ஆனால், அதுதொடர்பான விடியோக்களைப் பார்க்கும்போது, காஸா மருத்துவமனை மீதான தாக்குதலில் பிற அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. பிற குழுவினர் செய்தது போல தெரிகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் - காஸா இடையே போர் நடந்து வரும் மிகவும் இக்கட்டாக சூழலில், இஸ்ரேலுக்கு வந்து தங்களது ஆதரவை தெரிவித்திருப்பதற்கு ஜோ பைடனுக்கு, பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய நெதன்யாகு, நாகரிக சக்திகளுக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கும் இடையிலான போர் என்று இதனை  விவரித்தார். இஸ்ரேலின் பின்னால் அணிதிரளுமாறு இதர நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

இரு தலைவர்களின் சந்திப்பின்போது, ஜோ பைடனிடம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 1,400 பேர் பலியாகியுள்ளனர். அக்டோபர் 7ஆம் தேதி மற்றொரு கருப்புநாளாக மாறிவிட்டது. அதிபர் ஜோ பைடன் சொல்வதைப்போல ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைவிடவும் ஹமாஸ் மிக மோசமானதாக மாறியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com