ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய அளவிலான அலைகள் கரையோர பகுதிகளை தாக்கி வருகின்றன.
ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 20-க்கும் அதிக முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் சாலைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். பல்வேறு சாலைகளும் சேதமடைந்துள்ளது.
ஹோன்ஷு அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடலோரப் பகுதி மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடற்கரைகளை சிறிய அளவிலான அலைகள் தாக்கு வருவதாகவும், ஒன்று முதல் 5 அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக அலைகள் எழுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், சாலைகளிலும் கடல் நீர் புகுந்துள்ளதால் மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள் வேகமாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.