
மாலத்தீவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சையான கருத்துகளை மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சுற்றுலாத் தலமான மாலத்தீவை இந்தியர்கள் பெரும்பாலானோர் புறக்கணித்துள்ளனர்.
மாலத்தீவு பயணத்துக்கான முன்பதிவுகளை இந்தியர்கள் பலர் திரும்பப் பெற்றுள்ளனர். இதனால், சுற்றுலாத்துறை வருவாயை பெருமளவு நம்பியுள்ள மாலத்தீவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
மாலத்தீவை புறக்கணிப்போம் என்ற வாசகம் இணையத்தில் பரவி வரும் நிலையில், தனது நட்பு நாடான சீனாவிடம் மாலத்தீவு அதிபர் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் 5 நாள்கள் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். இரண்டாவது நாளான இன்று (ஜன. 9) தென்கிழக்கு சீனாவின் ஃபுஜியான் பகுதியில் பேசிய அவர், மாலத்தீவுடன் நெருங்கிய உறவு கொண்டது சீனா. பரஸ்பர மேம்பாட்டில் மாலத்தீவின் சிறந்த நட்பு நாடாகவும் சீனா விளங்குகிறது. கரோனாவுக்கு முன்புவரை எங்களின் முதன்மை சந்தையாக சீனா இருந்தது. இதனை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் சீனா அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மாலத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ரஷியா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.