மத்திய மேற்கு நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இந்தியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாங்கேயின் நேபால்கஞ்சில் இருந்து காத்மாண்டு செல்லும் பயணிகள் பேருந்து, பாலத்தில் இருந்து விலகி ராப்தி ஆற்றில் விழுந்தது. உயிரிழந்த 8 பயணிகளின் அடையாளம் இதுவரை காணப்பட்டுள்ளது. அதில் இரண்டு இந்தியர்கள்.
பேருந்து விபத்தில் மேலும் 22 பயணிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் பலியான இந்தியர்களில், ஒருவர் பிகாரின் மலாஹியைச் சேர்ந்த யோகேந்திர ராம்(67), மற்றொருவர் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முனே(37) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக லமாஹி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தலைமை ஆய்வாளர் கூறினார்.