யேமனில் உள்ள ஹவுதி நிலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் ஆறாவது சுற்றுத் தாக்குதலை வெள்ளிக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.
ஈரானிய ஆதரவு கிளர்ச்சி அமைப்பான ஹவுதிக்கள், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்தவே செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைச் செலுத்தும் ஹவுதிகளின் நிலைகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது.
ஹவுதிகளின் செய்தி நிறுவனமான அல்-மஸீரா, வடக்கு துறைமுக நகரமான ஹோடீடாவில் அமெரிக்க போர் விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
முன்னர், சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதலை ஹவுதிகள் நிறுத்துவதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
காஸாவில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நான்கு மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. அபாயகரமான பேரழிவை ஏற்படுத்தும் இந்தத் தாக்குதல் சமீபத்திய வரலாற்றில் எங்கும் நடக்காதது. மத்திய கிழக்கு பிராந்தியங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: போரில் பெண்கள் ஏன் பலியாகவேண்டும்? : ஐநா
காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. காஸாவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பசியால் வாடுவதாக ஐநா தெரிவித்துள்ளது.