
பிரேசில் கடற்கரையில் உள்ள சுறா மீன்கள் கொக்கைன் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் உயிரியலாளர்கள் ரியோ டி ஜெனிரோவிற்கு அருகிலுள்ள கடற்கரையில் இருந்து எடுக்கப்பட்ட 13 பிரேசிலிய கூர்மையான மூக்கு கொண்ட சுறா மீன்களை பரிசோதித்தனர்.
ஓஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், சுறாமீன்களின் கல்லீரல்களில் கொக்கைன் பாதிக்கப்பட்டு இருப்பதை முதலில் கண்டறிந்துள்ளனர்.
போதைப்பொருள் தயாரிக்கப்படும் சட்டவிரோத ஆலைகள் மூலமாகவோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் கழிவுகள் மூலமாகவோ கொக்கைன் கடல் நீரில் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கடலில் கடத்தல்காரர்களால் கொட்டப்படும் கொக்கைன்களும்கூட ஒரு ஆதாரமாக இருக்கலாம். இருப்பினும், இது குறைவான அளவில் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
லீரியாவின் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் கடல் சுற்றுச்சூழல் நச்சுவியலாளர் சாரா நோவைஸ், “இவை மிக முக்கியமானவை, இது கவலைக்குரியது” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “ஆய்வில் உள்ள அனைத்து பெண் சுறாக்களும் கர்ப்பமாக இருந்தன. ஆனால் சுறாவின் வயிற்றிலுள்ள கருவுக்கு கொக்கைன் போதைப்பொருளின் விளைவுகள் ஏற்படவில்லை.
கொக்கைன் சுறாக்களின் நடவடிக்கைகளை மாற்றுகிறதா என்பதைக் கண்டறிய மேலும் ஆராய்ச்சி தேவை. இருப்பினும், போதைப் பொருள்கள் மனிதர்களைப் போலவே விலங்குகளிலும் இதேபோன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று முந்தைய ஆராய்ச்சி காட்டுகிறது” என்றனர்.
இதே போல கடந்தாண்டு, இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் சேகரிக்கப்பட்ட கடல் நீர் மாதிரிகளில் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பென்சாயில்கோனைன் உள்ளிட்ட இரசாயன கலவைகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.