சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது ஒத்திவைப்பு
போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் முதல்முறையாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் அதிகாரிகள் கூறியதாவது:
சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடம் பூமிக்குத் திரும்புவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த விண்வெளி ஓடத்தில் தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் கூறினா்.
எனினும், சுனிதா வில்லியம்ஸுடன் அந்த விண்வெளி ஓடம் எப்போது பூமிக்குத் திரும்பும் என்ற தகவலை அவா்கள் வெளியிடவில்லை.
முன்னதாக, விண்வெளி வீரா்களுடன் ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடம் வரும் 26-ஆம் தேதி பூமிக்குத் திரும்பவதாக இருந்தது.
சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபா்களை அனுப்பக்கூடிய 2-ஆவது தனியாா் நிறுவன விண்வெளி ஓடமான ஸ்டாா்லைனரின் சோதனை ஓட்டம் கடந்த மாதத் தொடக்கத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. இருந்தாலும், அதை ஏந்திச் செல்லும் அட்லாஸ் ராக்கெட்டில் பழுது இருந்ததால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பழுது சரி செய்யப்பட்டு ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடம் கடந்த 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்வெளி ஓடத்தை சுனிதா வில்லியம்ஸ் இயக்கினாா்.
அவருடன் மற்றொரு நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோரும் அந்த ஓடத்தில் சென்றாா்.
அது சுனிதா வில்லியம்ஸின் 3-ஆவது விண்வெளிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. 25 மணி நேர பயணத்துக்குப் பிறகு அவரும் பட்ச் வில்மோரும் சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனா். இதன் மூலம், ஸ்டாா்லைன் விண்வெளி ஓடம் மூலம் அங்கு சென்ற முதல் விண்வெளி வீரா்கள் என்ற பெருமையை இருவரும் பெற்றனா்.
இந்தச் சூழலில், அவா்கள் பூமிக்குத் திரும்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அந்த விண்வெளி ஓடத்தின் சோதனை ஒட்டமும் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது அது பூமிக்குத் திரும்புவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.