எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றும் வரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து உள்ளிட்ட மத்தியஸ்தம் செய்து வரும் நாடுகள், இந்த தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் அடுத்த வாரம் தொடங்குவதற்கு முன்பாக எட்டப்பட வேண்டும் என முயற்சித்து வருகின்றன.
ஹமாஸ் உடன்படிக்கையின் முக்கிய விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டாலும் நிரந்த போர் நிறுத்தத்துக்கு படிப்படியாக எட்டப்படும் ஒப்புதலை எதிர்பார்ப்பதாக எகிப்து அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், தற்போதைக்கு ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸ் பிணையாக வைத்துள்ளவர்களில் 40 கைதிகளை விடுவிக்க பேசப்பட்டது.
காஸாவில் இருந்து இஸ்ரேல் முற்றிலும் வெளியேறும் வரை எஞ்சிய பிணைக்கைதிகளை விடுவிக்க போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீன கைதிகளின் விடுதலையை (வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உள்பட) ஹமாஸ் கோரி வருகிறது.
இஸ்ரேல் பகிரங்கமாக மறுத்ததோடு தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த பிறகு ஹமாஸை வேரோடு அழிக்கும் வரை தங்கள் தாக்குதல் தொடரும் என தெரிவித்தது.
இரு தரப்புக்கும் மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள் உடன்படிக்கையை நிறைவேற்ற இஸ்ரேல், ஹமாஸுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.