ஹைதராபாத்: சிகாகோவில் உயர்கல்வி பயின்றுவந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயது மாணவர் ரூபேஷ் சந்திரா மே 2ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விஸ்கோன்சின் பகுதியில் உள்ள கான்கோர்டியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வந்த மாணவர் மே 2ஆம் தேதிக்குப்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சிகாகோவுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக ரூபேஷ் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய தொடர்ந்து காவல்துறை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபேஷ் குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு சிகாகோ காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து அவர் காணாமல் போனதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 2ஆம் தேதி மதியம், வாட்ஸ்ஆப் காலில், தனது மகனுடன் பேசியதாக, அவரது தந்தை தெரிவித்துள்ளார். அப்போது அவர் ஏதோ வேலையாக இருப்பதாகவும் பிறகு பேசுவதாகவும் கூறி அழைப்பைத் துண்டித்திருக்கிறார். பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை, வாட்ஸ்ஆப் ஆஃப்லைனில் சென்றுவிட்டது என்று கூறப்படுகிறது.
அவருடன் தங்கியிருந்த நண்பர்களை, குடும்பத்தினர் தொடர்புகொண்டு கேட்டபோது, யாரோ சிலரை அவர் சந்திக்கச் சென்றதாகவும் அவர்கள் யார் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ரூபேஷின் குடும்பத்தினர் அமெரிக்க தூதரகத்திலும் தொடர்பு கொண்டு மகன் காணாமல் போனது குறித்து தெரிவித்துள்ளனர்.
இந்திய வெளியுறவு விவகாரத் துறைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ரூபேஷின் சகோதரர் எக்ஸ் பக்கத்தில் தங்களது குடும்ப உறுப்பினர் ஒருவர் சிகாகோவில் மாயமானது குறித்து கடிதம் எழுதி அதனை வெளியிட்டு, வெளியுறவு விவகாரத் துறையையும் இணைத்துள்ளார்.