
கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக நாள்தோறும் 140 பெண்கள் அவர்களது வாழ்க்கைத் துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டிருக்கும் தரவுகளில் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம், பெண்களுக்கு மிக ஆபத்தான இடமாக அவர்கள் வாழும் வீடே மாறியிருப்பதாகவும், கடந்த 2023ஆம் ஆண்டின் தரவுகளை ஐக்கிய நாடுகள் அவையின் இரு அமைப்புகள் வெளியிட்டிருக்கும் தரவுகள் கூறுகின்றன.
ஐ.நா. அவை வெளியிட்ட தரவுகளில், கடந்த 2023ஆம் ஆண்டில் சுமார் 51 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் அவர்களது வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாக, ஐக்கிய நாடுகள் அவையின் பெண்கள் அமைப்பும், போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகமும் இணைந்து வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சர்வதேச பெண்களுக்கான வன்முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மற்றொன்றையும் தெரிவித்துள்ளது. அதாவது, பெண்கள் கொலை செய்யப்படுவது அதிகரிக்கவில்லை, மாறாக, கொலை செய்யப்படும் பெண்களின் தகவல்கள் கிடைப்பது அதிகரித்துள்ளது என்று விளக்கியிருக்கிறது.
பாலின ரீதியாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நடக்கும் இதுபோன்ற மிகக் கொடூரமான வன்முறைகள் எல்லா இடங்களிலும் தொடர்வதாகவும், எந்த ஒரு மாகாணமும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்றும், இந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் அபாயகரமான இடமாக மாறியியிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த இந்தப் படுகொலையில் ஆப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. கணவர் அல்லது குடும்பத்தினரால் கடந்த 2023ல் மட்டும் ஆப்ரிக்காவில் 21,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் 1 லட்சம் பெண்களில் 2.9 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், விகிதத்திலும் ஆப்ரிக்காவே முதலிடத்தில் உள்ளதாம்.
அதற்கடுத்த இடங்களில் அமெரிக்கா, ஓசினியா உள்ளன. ஆசியா மற்றும் ஐரோப்பாவில்தான் இது குறைவாக உள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், வாழ்க்கைத் துணையால், உள்நோக்கத்தோடு நடக்கும் கொலைகள் அதிகம், அதேவேளையில், வீட்டுக்கு வெளியேதான் ஆண்கள் தங்களது குடும்பத்தினரால் கொலை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெறும் எண்ணிக்கையில் என்று எடுத்துக்கொண்டால், இந்த உலகில் கொலை செய்யப்படுபவர்களில் ஆண்களும் சிறுவர்களுமே அதிகம் என்றாலும், மக்கள்தொகை விகிதாசாரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கொலைகள் அதிகம் என்று அறிக்கை கூறுகிறது.
பொதுவாக கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், 2023ஆம் ஆண்டு நடந்த ஒட்டுமொத்த கொலையில் 80 சதவீதம்பேர் ஆண்கள். 20 சதவீதம்பேர் பெண்கள். ஆனாலும், குடும்ப வன்முறை தொடர்பான குற்றங்களில் ஆண்களை விடவும் பெண்களே அதிகம் கொலை செய்யப்படுவதாகவும், உள்நோக்கத்தோடு, வாழ்க்கைத்துணை அல்லது குடும்பத்தில் ஒருவரால் கொலை செய்யப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள்தான் என்றும் அறிக்கை ஒரு பகிரங்க தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட 2023ல் பலியான பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை இன்னமும் மிக மிக அபாய அளவிலேயே உள்ளது என்பதுதான் அறிக்கையின் முக்கிய சாராம்சம்.
உரிய நேரத்தில், எடுக்கப்படும் மிகச் சிறப்பான நடவடிக்கையின் காரணமாக, இந்த கொலைச் சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று இரண்டு அமைப்புகளும் அறிவுறுத்தியிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.