
மத்தியக் கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில் ஜி 7 நாடுகள் தலைவர்களுடன் இத்தாலி ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆலோசிக்கவுள்ளதாக இத்தாலி பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நேற்று இரவு ஏவுகணைகள் மூலம் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்கத்தில் தரைவழித் தாக்குதலை நடத்திவருகிறது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அந்த அமைப்பின் மத்திய கவுன்சில் துணைத் தலைவர் நபீல் கெளக்கும் கொல்லப்பட்டார்.
கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டார்.
படிக்க | ஈரானின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடல்
ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்களைக் கொன்றதால், இஸ்ரேலை பழிவாங்கும் நோக்கத்தில் ஈரான் நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர்ப் பதற்றம் குறித்து ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான ஈரான் தாக்குதல், லெபனானில் நிலவும் நிலையற்றத் தன்மை உள்ளிட்டவை மிகுந்த கவலை அளிக்கும் சம்பவங்கள் என தனது அமைச்சரவையில் மெலோனி தெரிவித்துள்ளார்.