
சீனா விமானப் படையின் 20 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் வியாழக்கிழமை காலை அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்புத் துறை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.
மேலும், தைவான் கடற்பகுதியிலும் சீனாவின் 8 போர்க் கப்பல்கள் இன்று நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவானுக்குள் புகுந்த சீன போர் விமானங்கள்
தைவான் எல்லைக்குள் சீனாவின் 20 போர் விமானங்களும், 8 போர்க் கப்பல்களும் அத்துமீறி இன்று காலை 6 மணியளவில்(உள்ளூர் நேரப்படி) நுழைந்ததாக தைவான் பாதுகாப்புத் துறை வரைபடங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மேலும், தாங்கள் சூழலை கண்காணித்து வருவதாகவும், சூழலுக்கு ஏற்ப செயல்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சீனா - தைவான் மோதல்
தைவானை தனது நாட்டில் இருந்து பிரிந்த ஒரு மாகாணமாக கருதும் சீனா, மீண்டும் தைவானை தனது நாட்டுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறது.
ஆனால், காலப்போக்கில் அரசாங்கம், பொருளாதாரம் எனத் தனி அடையாளத்தை பெற்ற தைவான், மீண்டும் சீனாவுடன் ஒன்றிணைய மறுப்பு தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில், தைவான் அதிபர் லாய் சிங் தேவை பிரிவினைவாதி என்றும், தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சீனா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.
அவ்வப்போது, தைவானை அச்சுறுத்தும் விதமாக போர்ப் பயிற்சியிலும் சீனா ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.
சீன பாதுகாப்புப் படைகள் பயிற்சி
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, தைவானின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு இடையூறு தரும் விதமாக, தைவான் எல்லையில், சீன விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது.
அப்போது தைவானை அச்சுறுத்தும் விதமாக 125 போர் விமானங்களையும், போர்க் கப்பல்களையும், சீனாவின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலான லியோனிங்கையும் எல்லையில் நிறுத்தி சீனா பயிற்சி மேற்கொண்டது.
இந்த பயிற்சியின்போது, அடிக்கடி தைவான் எல்லைக்குள் சீனப் படையினர் வந்துசென்றதாகவும், தைவான் மீது 2 ஏவுகணைகளை ஏவியதாகவும் குற்றம்சாட்டியுள்ள தைவான் அதிகாரி, விரைவில் சீனா உண்மையான தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.