மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஈரான் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து: பலி 51 ஆக உயர்வு!

ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 51 பேர் ஆக உயர்ந்துள்ளது.

News image
வெடிவிபத்து நிகழ்ந்த நிலக்கரி சுரங்கம்
Updated On :22 செப்டம்பர் 2024, 11:42 am

DIN

ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 51 பேர் ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு ஈரானில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 51 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு ஊடகம் வாயிலாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் தெற்கு கொராசன் மாகாணத்தில் நடந்த வெடிவிபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவில் உள்ள தபாஸில் உள்ள சுரங்கத்தின் இரண்டு தொகுதிகளில் மீத்தேன் வாயு வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி பிளாக்கில் 22 பேரும், பி பிளாக்கில் 47 பேரும் பணியில் இருந்தனர். இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள். சுரங்கத்தில் சிக்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று முதல்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 5:30 மணிக்கு வெடிவிபத்து நேரிட்டதாக மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடிவிபத்தின் போது அந்தத் தொகுதிகளில் 69 தொழிலாளர்கள் பணியின் இருந்ததாக தெற்கு கொராசானின் ஆளுநர் ஜாவத் கெனாட்சாதே தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் நிலக்கரியில் 76 சதவிகிதம், இந்த பகுதியிலிருந்துதான் கிடைக்கின்றன. இந்தச் சுரங்கப் பகுதிகளில் மதன்ஜூ உள்பட 8 பெரிய நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.

மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர் உள்பட 13 ஆம்புலன்ஸ்கள், 40 ஆயுதமேந்திய குழுக்கள், 100 பேர் வரையிலும் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், நிலக்கரி சரிந்து கிடப்பதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் அவைக் கூட்டத்திற்கு செல்ல, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தயாராகி வரும் நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார், ஈரான் அதிபர்.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும், பாதிப்படைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஈரான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரானில் சுரங்க விபத்து ஏற்பட்டிருப்பது இது முதல்முறை அல்ல. முன்னதாக, 2023 ஆம் ஆண்டில், ஈரானின் டம்கன் நகரில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியாகியிருந்தனர். அதற்கு முன்னதாக, 2021 ஆம் ஆண்டிலும், அதே சுரங்கத்தில் நிலக்கரி இடிந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.

மேலும், 2017 ஆம் ஆண்டில், ஆசாத் ஷஹரில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 43 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.