
மெட்டா தொழில்நுட்ப நிறுவனத்துக்கு கால அவகாசம் கொடுத்து நேபாள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபல சமூக ஊடக செயலிகளான முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, நேபாள சட்டத்துக்கு உள்பட்டு 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு மெட்டா நிறுவனம் உடன்படவில்லை என்றால் அந்நாடு முழுவதும் அதன் செயலிகள் தடைசெய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தகவல் ஆணையம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய நேபாள தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரிதிவி சுப்பா குருங் கூறியதாவது:
‘மெட்டா நிறுவனம் நேபாள சட்டத்திற்கு உட்பட்டு அதன் நடவடிக்கைகளை பதிவு செய்ய அரசு பல முறை கேட்டுக்கொண்ட போதிலும் அதற்கு உடன்பட மறுத்து வருகின்றது.
மேலும், அவர்களுக்கு மூன்றாவது முறை அனுப்பப்பட்ட நோட்டீஸின் காலக்கெடு முடிந்த நிலையில் 7 நாள்களுக்குள் அந்நிறுவனம் பதிவு செய்யவில்லை என்றால் அதன் செயலிகள் அனைத்தும் நேபாளத்தில் தடை செய்யப்படும்’ என எச்சரித்துள்ளார்.
முன்னதாக, நேபாள அரசு தங்களது நாட்டில் செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிவிதிப்பு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தரவு நிர்வாக விதிகள் உள்ளிட்ட அந்நாட்டு சட்டங்களுக்கு உடன்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பகுதியின் உயர் அதிகாரி நேபாளம் விரைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:தாய்லாந்து: கடலில் விழுந்து நொறுங்கிய காவல் விமானம்! 6 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.