

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அமைதி பரிசை ஃபிஃபா நிர்வாகம் வழங்கியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்தாண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிஃபா நிர்வாகம் நேற்று (டிச. 5) வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைமையில் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வாஷிங்டனில் நடைபெற்ற விழாவில் உலக அமைதியை வலியுறுத்தும் நபர்களுக்கு வழங்க புதியதாக அமைதி பரிசை அறிமுகப்படுத்துவதாக ஃபிஃபா நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் போர்நிறுத்தம் கொண்டு வந்ததற்காக, இந்தப் புதிய அமைதி பரிசை அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு, அவரது நெருங்கிய கூட்டாளியாக அறியப்படும் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபாடினோ வழங்கியுள்ளார்.
இதன்மூலம், ஃபிஃபாவின் அமைதி பரிசை வென்ற முதல் நபர் எனும் பெருமையை அதிபர் டிரம்ப் பெற்றுள்ளார்.
இதையடுத்து, அமைதி பரிசு பெற்ற அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் தனது குடும்பத்தினருக்கு நன்றி எனக் கூறியதுடன், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் மெக்சிகோ அதிபர் கிளாவ்டியா ஷெயின்பாம் ஆகியோரின் ஒத்துழைப்புக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இத்துடன், இந்த அமைதிப்பரிசு என் வாழ்க்கையின் மிகப் பெரிய கௌரவங்களில் ஒன்று என அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இடையில் போர்நிறுத்தம் கொண்டு வந்ததாகத் தொடர்ந்து கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
இருப்பினும், நிகழாண்டில் (2025) அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசூலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அந்தப் பரிசை அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: படகுகள் மீதான தாக்குதல்: அமெரிக்காவில் அதிகரிக்கும் சா்ச்சை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.