/

துருக்கி விடுதியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு

வடமேற்கு துருக்கியில் உள்ள சொகுசு விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

News image

தீ விபத்து ஏற்பட்ட சொகுசு விடுதி - AP

Updated On :21 ஜனவரி 2025, 10:04 pm IST

வடமேற்கு துருக்கியில் உள்ள சொகுசு விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயாவிலுள்ள கர்தல் சொகுசு விடுதியில் இன்று (ஜன. 21) தீ விபத்து ஏற்பட்டது.

துருக்கியில் கல்வி நிலையங்களுக்கு பருவகால விடுமுறை விடப்பட்டுள்ளதால் விடுதியில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே இந்த விடுதியில் உள்ள சமையலறையில் இன்று காலை 3.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மற்ற அடுக்குகளுக்கும் தீ மளமளவெனப் பரவியது. காற்று வேகமாக வீசியதால், 12 மாடிகளைக் கொண்டிருந்த விடுதியில் தீ பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கி சுகாதாரத் துறை அமைச்சர் கேமல் மேமிசோக்லு தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டபோது கர்தல் விடுதியில் 234 பேர் தங்கியிருந்ததாக துருக்கி காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீக்காயங்களுடன் சிலர் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.