
இராக் நாடாளுமன்றத்தில் பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆக குறைத்து குழந்தை திருமணச் சட்டத்தை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியுள்ளனர்.
மேலும், திருமணம், விவாகரத்து உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள் குறித்து முடிவெடுத்துக் கொள்ள இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளனர்.
இராக்கில் குழந்தை என்பது நீண்டகாலப் பிரச்னையாக உள்ளது. அந்நாட்டில் உள்ள 28 சதவிகித பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டதாக ஐ.நா. கணக்கெடுப்பில் தெரியவந்தது.
இந்நிலையில், குழந்தை திருமணங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்கி, ஏழை பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், திருமண வயதை குறைத்து இராக் நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றியுள்ளது.
இராக்கில் பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்த நிலையில், அந்நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் ஷியா முஸ்லிம் பெண்களின் திருமண வயது 9 ஆகவும், சுன்னி முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 ஆகவும் குறைத்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நீதியை மேம்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கைதான் இந்த சட்டம் என்று இராக் நாடாளுமன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இராக்கில் குழந்தை திருமணச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், வறுமையில் இருந்து தப்பிப்பதற்காக தங்களின் குழந்தைகளை பெற்றோர்களே திருமணம் செய்து வைக்கும் சூழல் அதிகரிக்கும் என்றும், இவ்வாறான பல திருமணங்கள் தோல்வியில் முடிவதால் இளம் பெண்கள் வாழ்நாள் முழுவதும் விளைவுகளை சந்தித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சட்டத்துக்கு இராக் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.