/

அதிகாலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷியா தாக்குதல்! 14 பேர் பலி!

உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்- ஏபி
Updated On :17 ஜூன் 2025, 7:15 am

DIN

உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கீவ் நகரத்தின் மீது இன்று (ஜூன் 17) அதிகாலை முதல் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 14 பேர் கொல்லப்பட்டதுடன், 44 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கீவ் நகரத்தின் ராணுவ நிர்வாகத் தலைவர் தைமுர் தகாசென்கோ கூறியதாவது:

“கீவ்விலுள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் மீதான ரஷியாவின் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணியில், மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நள்ளிரவு முதல் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் கீவ் நகரத்தின் ஏராளமான கட்டடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் உள் துறை அமைச்சர் கூறுகையில், ரஷியாவின் தாக்குதல்களில் படுகாயமடைந்த அமெரிக்கர் ஒருவர் தற்போது பலியாகியுள்ளதாகவும், அடுக்குமாடி குடியிருப்பிலிருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகள் தகர்க்கப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

இத்துடன், ஸ்விடோஷைன்ஸ்கி மற்றும் சோலோமியன்ஸ்கி ஆகிய மாவட்டங்களில், ரஷிய டிரோன்களை உக்ரைன் விமானப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதனால், உண்டான தீயினால் ஏராளமான மக்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.