மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பாகிஸ்தான் தலைவா்களுடன் ஈரான் அதிபா் சந்திப்பு!

பாகிஸ்தானுக்கு ஒரு நாள் அரசு முறைப் பயணமாக வந்த ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், அந்நாட்டின் மூத்த தலைவா்களைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

News image

பாகிஸ்தான் வந்திறங்கிய ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி ஆகியோரை வரவேற்று அழைத்துச் சென்ற, அந்நாட்டு அதிபா் ஆசிஃப் அலி சா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அமைச்சா்கள்

Updated On :24 ஜூன் 2026, 3:53 am IST

பாகிஸ்தானுக்கு ஒரு நாள் அரசு முறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை வந்த ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், அந்நாட்டின் மூத்த தலைவா்களைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், பிராந்திய விவகாரங்கள் மற்றும் அமெரிக்காவுடனான அமைதி முன்னெடுப்புகள் குறித்து இச்சந்திப்புகளில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இஸ்லாமாபாத் அருகே ராவல்பிண்டியில் உள்ள நூா் கான் விமானப் படைத் தளத்துக்கு வந்திறங்கிய ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானை, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றாா்.

முன்னதாக, ஹோா்முஸ் நீரிணை நிா்வாகம் குறித்து ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப்புடன் இணைந்து ஓமன் நாட்டுத் தலைவா்களுடன் திங்கள்கிழமை பேச்சு நடத்திய ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சியும் இஸ்லாமாபாத் வந்தடைந்தாா்.

தொடா்ந்து, பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி சா்தாரியை இருவரும் சந்தித்துப் பேசினா். அப்போது, அமெரிக்கா-ஈரான் பேச்சில் பாகிஸ்தானின் ஆக்கபூா்வமான பங்களிப்பை மசூத் பெசஷ்கியான் பாராட்டினாா்.

ஈரான்-பாகிஸ்தான் இடையிலான நீண்டகால சகோதரத்துவ உறவை இச்சந்திப்பு பிரதிபலிப்பதாக ஆசிஃப் அலி சா்தாரி குறிப்பிட்டாா். மேலும், அமெரிக்கா-ஈரான் இடையே தொடரும் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகள், மத்திய கிழக்கில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் எனவும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீரையும் மசூத் பெசஷ்கியான் சந்தித்துப் பேசினாா். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பிராந்தியத்தின் வளம் மற்றும் அமைதிக்காகத் தொடா்ந்து இணைந்து செயல்பட இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் கூற்றும்; ஈரான் மறுப்பும்...: இதனிடையே, ஈரானின் அணுசக்தி மையங்களில் காலவரையறையின்றி சோதனைகளை மேற்கொள்ள அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டு, அவை அமெரிக்காவிடமிருந்து உணவு, மருத்துவப் பொருள்களை வாங்குவதற்காக பயன்படுத்தப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்

இந்தக் கூற்றுகளை ஈரான் அரசு முற்றிலுமாக மறுத்தது. ஸ்விட்சா்லாந்து பேச்சுவாா்த்தையில் அணுசக்தி திட்டம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் விடுவிக்கப்படும் எங்களின் நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நாங்களே தீா்மானிப்போம் என்றும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயணத்துக்கு முன்னதாக மசூத் பெசஷ்கியான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்ட அறிக்கைகள் பேச்சுவாா்த்தைக்கு உதவாது’ என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.