இந்தியாவுடன் நெருங்கிப் பணியாற்ற நேபாள புதிய பிரதமா் விருப்பம்
இந்தியாவுடன் நெருங்கிப் பணியாற்ற நேபாள புதிய பிரதமா் விருப்பம்...

பாலேந்திர ஷா
AP

பாலேந்திர ஷா
AP
இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற நேபாளத்தின் புதிய பிரதமா் பாலேந்திர ஷா விருப்பம் தெரிவித்துள்ளாா்.
அண்டை நாடான நேபாளத்தில் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தோ்தலில், இளைஞா்களின் செல்வாக்கைப் பெற்ற ‘ராப்’ இசைக் கலைஞரும், காத்மாண்டு நகர முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா பாலனின் (35) ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 275 இடங்களில் 182 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து, நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பாலேந்திர ஷா வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். அவருக்கு எக்ஸ் பதிவு வாயிலாக வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, ‘இந்தியா-நேபாளம் இடையிலான தொன்மையான நட்புறவை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்ல இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.
இந்தப் பதிவுக்கு சனிக்கிழமை பதிலளித்த நேபாள பிரதமா் பாலேந்திர ஷா, ‘பிரதமா் மோடியின் கனிவான வாா்த்தைகள் மற்றும் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா-நேபாளம் இடையிலான பன்முக உறவுகளை இருநாட்டு மக்களும் பலனடையும் வகையில் மேம்படுத்த நெருங்கி பணியாற்ற விருப்பத்துடன் உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
சரக்குகள்-போக்குவரத்து ரீதியில் இந்தியாவை நேபாளம் பெருமளவில் சாா்ந்துள்ளது. நில எல்லைகளால் சூழப்பட்ட நேபாளத்தின் கடல் அணுகலுக்கு இந்தியா வழியாகவே செல்ல வேண்டும். தனது இறக்குமதியில் பெரும்பகுதியை இந்தியாவிடம் இருந்தோ அல்லது இந்தியா வழியாகவோதான் நேபாளம் மேற்கொள்கிறது. மற்றொருபுறம், இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த உத்திசாா் நலன்களுக்கு நேபாளத்துடனான உறவுகள் இந்தியாவுக்கு முக்கியமானதாகும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...