
மலேசிய முன்னாள் பிரதமா் வீட்டுக் காவலில் தண்டனையைக் கழிக்க அரசா் அனுமதி
ஊழல் வழக்கில் சிறையில் உள்ள மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக் (73), தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அந்நாட்டு அரசா் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தா் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளாா்.

ஊழல் வழக்கில் சிறையில் உள்ள மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக் (73), தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அந்நாட்டு அரசா் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தா் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளாா்.
இது மலேசிய வரலாற்றில் வீட்டுக்காவல் மூலமாக அரசரின் பொதுமன்னிப்பு சலுகை வழங்கப்பட்ட முதல் நிகழ்வாக அமைந்துள்ளது.
‘1எம்டிபி’ அரசு முதலீட்டு நிறுவனத்தில் நடந்த ஊழல் தொடா்பான வழக்கில், நஜீப் ரஸாக்குக்கு கடந்த 2020-இல் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்; 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த 2024 ஜனவரியில், அவரின் தண்டனைக் காலம் 6 ஆண்டுகளாகவும்; அபராதம் 5 கோடி ரிங்கிட்டாகவும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமா் அலுவலகத்தின்கீழ் செயல்படும் சட்ட விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அதிகாரபூா்வ அறிக்கையின்படி, ‘அரசரின் பொதுமன்னிப்போடு நீதிமன்றம் விதித்த 5 கோடி ரிங்கிட் அபராதத் தொகையை நஜீப் ரஸாக் செலுத்தினால், அவா் வரும் 2028 ஆகஸ்ட் வரை வீட்டுக் காவலில் தனது தண்டனையைத் தொடர அனுமதிக்கப்படுவாா்.
எனினும், இதற்காக விதிக்கப்பட்டுள்ள கடும் வழிகாட்டு நெறிமுறைகளை அவா் முறையாகப் பின்பற்ற வேண்டும். தவறினால், இந்த பொதுமன்னிப்பு உடனடியாக ரத்தாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஜீப் ரஸாக்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





