பெல்லாரி, ஜன. 8: உச்ச நீதிமன்றம் அமைத்த அதிகாரக்குழு அளித்த அறிக்கை
அடிப்படையில் ராஜிநாமா செய்யும்படி எதிர்க்கட்சிகள் கோருவது சரியல்ல என்று கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் கருணாகர ரெட்டி தெரிவித்தார்.
பெல்லாரியில் சனிக்கிழமை மாவட்ட காவல்துறை விளையாட்டுப் போட்டிகளை
கருணாகர ரெட்டி தொடக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு கருணாகர ரெட்டியை சந்தித்த செய்தியாளர்கள், உச்ச நீதிமன்றம் அமைத்த மத்திய அதிகாரக்குழு (சிஇசி) அறிக்கையையொட்டி நீங்களும் (கருணாகர ரெட்டி) அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோரும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
கருணாகர ரெட்டி மேலும் கூறியதாவது:
ஓபுளாபுரம் சுரங்க நிறுவனத்துடன் என்னையும் இணைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எனக்கும் அந்த நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த் தகவலை உயர் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் நான் தெரிவித்துள்ளேன். இந்த நிலையில் சிஇசி அறிக்கை அடிப்படையில் நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, பரமேஸ்வர் ஆகியோர் கோருவது சரியல்ல.
மேலும் சிஇசி அறிக்கையை எதிர்த்து ஆட்சேபணை மனு தாக்கல் செய்ய 2 வார காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஓபுளாபுரம் சுரங்க நிறுவனம் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடவில்லை, பாதுகாக்கப்பட்ட வனத்துறை பகுதியிலோ, பிற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட சுரங்கப் பகுதியிலோ சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படவில்லை
என்று இந்திய சர்வே துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.