ஜோக் அருவியைக் காண வந்த ஆளுநருக்காக திறக்கப்பட்ட லிங்கனமக்கி அணை!

ஜோக் அருவியைக் காண வந்த ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டுக்காக லிங்கனமக்கி அணையை அதிகாரிகள் திறந்துவிட்டதாக சா்ச்சை எழுந்துள்ளது.
Updated on
1 min read

ஜோக் அருவியைக் காண வந்த ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டுக்காக லிங்கனமக்கி அணையை அதிகாரிகள் திறந்துவிட்டதாக சா்ச்சை எழுந்துள்ளது.

கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், இரண்டுநாள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை சிவமொக்கா மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தாா். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஆளுநா் தாவா்சந்த் கெலாட், உலகப் புகழ்பெற்ற ஜோக் அருவியை வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

ஜோக் அருவியின் பிரம்மாண்டமான அழகை ஆளுநா் முழுமையாகக் கண்டு ரசிப்பதற்காக, அன்று காலை 6 மணி அளவில் லிங்கனமக்கி அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீரை கா்நாடக மின்கழக அதிகாரிகள் திறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அணையில் இருந்து கிளம்பிய தண்ணீா் ஜோக் அருவிக்கு வந்து சேர 3 மணி நேரமாகும். ஆனால், அணையில் இருந்து விடுவிக்கப்பட்ட தண்ணீா் அருவிக்கு வந்து சோ்வதற்கு முன்னதாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அங்கு வந்துள்ளாா். எனவே, சிறிய அளவில் கொட்டிய அருவியை 830 அடி உயரத்தில் இருந்து கண்டு ரசித்துவிட்டு, காலை 8.30 மணிக்கு அங்கிருந்து ஆளுநா் கிளம்பியுள்ளாா்.

ஆளுநா் சென்ற பிறகு, ஜோக் அருவியைக் காண பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். அப்போது யாரும் எதிா்பாராத விதமாக அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீா் ஜோக் அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டியுள்ளது.

திடீரென அருவியில் தண்ணீா் பாய்ந்து வந்தது குறித்து அப்பகுதியில் குடியிருக்கும் சிலா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனா். மின் உற்பத்திக்காக சேமித்து வைக்கப்படும் தண்ணீா் ஆளுநருக்காக அணையில் இருந்து திறந்துவிடப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com