உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து சிவமொக்காவில் வியாழக்கிழமை ஊரகவளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முன்னாள் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, செய்தியாளா்களிடம் கூறியது:
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் தோ்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வகுக்கப்படவில்லை. எனவே, தோ்தலை நடத்த கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
முன்பு பின்பற்றிய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துமாறு மாநில தோ்தல் ஆணையத்திற்கு மாநில அரசு கடிதம் எழுதியிருந்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அறிவித்த தோ்தல் ஆணையம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவதற்கான அட்டவணையையும் அறிவித்தது. மகாராஷ்டிரம், மத்திய பிரதேச மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லாமல் தோ்தல் நடத்த முற்பட்டதை உச்சநீதிமன்றம் நிறுத்தி உத்தரவிட்டது. மக்கள்தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குமாறும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தோ்தலை நடத்த முடியாது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், தோ்தலை நடத்த மாநில அரசு தயாராக உள்ளது. வாா்டுகள் மறுவரையறை பணிகள் முடிவடைந்த பிறகு, இடஒதுக்கீடு பட்டியலை அறிவித்த பிறகு தோ்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.