புயல் பாதிப்புக்குள்ளான ஆதிதிராவிடர் நலப் பள்ளியை சீரமைப்பதில் மெத்தனம்

பண்ருட்டி, ஏப். 8: புயலால் சேதம் அடைந்த சேமக்கோட்டை ஆதிதிராவிடர் நலப் பள்ளி மூன்று மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. இதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டிவருகின்றனர். இதனால் இப்பள்ளிக் குழந்தைகள் இட நெருக
Updated on
1 min read

பண்ருட்டி, ஏப். 8: புயலால் சேதம் அடைந்த சேமக்கோட்டை ஆதிதிராவிடர் நலப் பள்ளி மூன்று மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. இதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டிவருகின்றனர். இதனால் இப்பள்ளிக் குழந்தைகள் இட நெருக்கடியிலும், பாதுகாப்பற்ற சூழலிலும் கல்வி பயின்று வருகின்றனர்.

பண்ருட்டி வட்டம் சேமக்கோட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சேமக்கோட்டை, ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி புயல் தாக்கியதில் மரங்கள் முறிந்து விழுந்ததனாலும், காற்றில் ஓடுகள் தூக்கி வீசப்பட்டதாலும் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன. பள்ளிக் கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்ததாலும், மாணவர்களின் பாதுகாப்புக் கருதியும் தமிழக அரசு பள்ளிகளை துரித கதியில் சீரமைக்கும் பணியை மேற்கொண்டு பின்னர் பள்ளியை திறந்தது.

அரசின் துரித நடவடிக்கையால் புயல் பாதிப்பின் சுவடு மறைந்துவரும் நிலையில், சேமக்கோட்டை ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி மட்டும் வகுப்பு அறையில் மேல் கூரை ஓடுகள் இல்லாமலும், முறிந்து விழுந்த கிளைகளை அப்புறப்படுத்தாமல் காட்சிப் பொருளாக உள்ளது. புயல் பாதித்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பள்ளியை மட்டும் மாவட்ட நிர்வாகம் சீரமைக்காதது ஏன் என்று தெரியவில்லை. பள்ளி வளாகத்தில் உள்ள மரக்கிளை முறிந்து ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டுள்ளதை அகற்ற யாரும் முன்வரவில்லை.

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இப்பள்ளிக் குழந்தைகள் 150-க்கும் மேற்பட்டவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

÷இதுகுறித்து சேமக்கோட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பார்வதி வேல்முருகன், ஒன்றியக் கவுன்சிலர் அமுதா தெய்வீகதாஸ் கூறியது: ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். புயலால் பள்ளிக் கட்டடம் சேதம் அடைந்துள்ளது. மாணவர்கள் உட்கார்ந்து படிக்கக்கூட இடமில்லை. பெரிய மரக்கிளை முறிந்து தனியாக தொங்கிநிற்கிறது. இதன் கீழேதான் மாணவர்கள் விளையாடுகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ளதை அறிந்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடமும், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியரிடமும் மனு அளித்தும், பல முறை நேரில் தெரிவித்தும் இதுநாள் வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் பள்ளியை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

÷இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததாலும், வகுப்பு அறை கதவுகள் பூட்டப்படாமல் உள்ளதாலும் சமூகவிரோதிகளின் கூடாரமாக உள்ளது. மேலும் பளளி வளாகத்தில் ஆடு, மாடுகளை கட்டி ஆக்கிரமித்து உள்ளனர். பள்ளியில் பயிலும் குழந்தைகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இப்பள்ளியை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com