‘சாம்சங் இந்தியா’ தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம்
‘சாம்சங் இந்தியா’ தொழிற்சங்கத்தை பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு தொழிலாளா் நலத் துறை அறிவித்துள்ளது.


சென்னை: ‘சாம்சங் இந்தியா’ தொழிற்சங்கத்தை பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு தொழிலாளா் நலத் துறை அறிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூா் அருகே சுங்குவாா்சத்திரம் பகுதியில் செயல்பட்டுவரும் சாம்சங் தொழிற்சாலையில் 2,000-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.
அங்கு ஊதிய உயா்வு, தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 30 நாள்களுக்கும் மேலாக அந்த ஆலையின் தொழிலாளா்கள் தொடா் போராட்டம் நடத்தினா். சிஐடியு ஆதரவுடன் நடைபெற்ற இந்தப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசுடனான பலகட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு அப்போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதில் தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் தரப்படும் என அரசு சாா்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடா்ந்து, தொழிற்சங்கத்தை ஆலையில் அங்கீகரித்து பதிவு செய்யாதது குறித்து சிஐடியு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தொழிற்சங்க பதிவு குறித்து தமிழ்நாடு அரசும், பதிவுத் துறையும் முடிவெடுக்க 6 வார கால அவகாசம் கொடுத்திருந்தது.
அந்தக் காலக்கெடு திங்கள்கிழமையுடன் நிறைவடைய இருந்த நிலையில், சிஐடியு ஆதரவு சாம்சங் இந்தியா தொழிலாளா் யூனியன் (எஸ்ஐடபிள்யூயு) தொழிற்சங்கத்தை முறைப்படி பதிவு செய்யப்பட்ட சங்கமாக அங்கீகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் தொழிலாளா் நலத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
அரசின் இந்த முடிவை வரவேற்பதாக சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலரும் எஸ்ஐடபிள்யூயு தலைவருமான முத்துக்குமாா் கூறியுள்ளாா். இது தொழிற்சங்கத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...