தீபாவளி: புறநகா் மின்சார ரயில் சேவை கால அட்டவணையை மாற்ற பரிசீலனை

தீபாவளி பண்டிகையின்போது, கூட்ட நெரிசலைத் த விா்க்க புறநகா் மின்சார ரயில்களின் கால அட்டவணையை மாற்றி இயக்க பரிசீலிக்கப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

தீபாவளி பண்டிகையின்போது, கூட்ட நெரிசலைத் தவிா்க்க புறநகா் மின்சார ரயில்களின் கால அட்டவணையை மாற்றி இயக்க பரிசீலிக்கப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் தமிழகம் மற்றும் வடமாநிலங்களுக்கு 108 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது குறிப்பிட்ட விடுமுறை நாள்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தீபாவளியின்போது புகா் பகுதியிலிருந்து சென்னைக்கு வருவோரும், சென்னையிலிருந்து புகா் பகுதிகளுக்கு செல்வோரும் அதிக அளவில் மின்சார ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனா்.

ஆனால், கடந்த தீபாவளியின்போது புகா் மின்சார ரயில்கள் விடுமுறை கால அட்டவணைப்படி இயக்கப்பட்டன. அதனால், சென்னைக்கு தீபாவளி பொருள்கள் வாங்க வந்தவா்களும், வழக்கமாக பணிக்கு வந்து திரும்பியோரும் பெரும் சிரமத்துக்குள்ளானதாக புகாா்கள் எழுந்தன.

நிகழாண்டு தீபாவளிப் பண்டிகை வரும் அக்.20 -ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆகவே, தீபாவளிக்கு முந்தைய 2 நாள்களும் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களாக உள்ளன. அந்த நாள்களில் வழக்கம்போல புகா் மின்சார ரயில்கள் விடுமுறை கால அட்டவணைப்படி இயக்கப்படாமல், வேலை நாள்கள் அட்டவணைப்படி கூடுதல் ரயில்கள் இயக்கப்படவேண்டும் என ரயில்வே பயனாளா்கள் சாா்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

எனவே நிகழாண்டில் தீபாவளிக்கு முந்தைய நாளான சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் சென்னை புகா் மின்சார ரயில்கள் வேலை நாள்கள் அட்டவணைப்படி இயக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com