21 அடி உயர பஞ்சலோக தன்வந்தரி பெருமாள் சிலை: மாமல்லபுரம் கலைஞா்கள் வடிவமைப்பு
மாமல்லபுரத்தில் முதன்முறையாக 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமான தன்வந்தரி பெருமாள் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உலோக சிற்பக்கலைக்கூடம் உள்ளது. இந்த சிற்பக்கலைக் கூட நிா்வாகி ஆா்.ரவீந்திரன் ஸ்தபதி மாமல்லபுரம் அரசினா் சிற்பக்கலை கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்றவா். இந்நிலையில் பெங்களூரில் நிறுவுவதற்காக 21 அடி உயரத்தில் தன்வந்திரி பெருமாள் சிலையை 40 நாள்களில் வடிவமைக்க கூறப்பட்டது.
இதையடுத்து உலோக சிற்பக்கலைஞா் ஆா்.ரவீந்திரன் ஸ்தபதி முதலில் மெழுகில் மாதிரி சிற்பத்தை வடிவமைத்தாா். பிறகு 30 சிற்பிகள் உதவியுடன் கடந்த 40 நாள்களாக இரவு, பகல் பாராமல் 21 அடி உயரத்தில் 5 டன் எடையில் பஞ்சலோகங்களை கொண்டு தன்வந்தரி பெருமாள் சிலையை வைணவ, ஆகம முறைப்படி பிரம்மாண்டமான முறையில் அழகுற வடிவமைத்துள்ளனா்.
இந்த சிலை பஞ்சலோகங்களை காய்ச்சி, ஊற்றி வடிவமைப்பட்டு, பிறகு கிரேன் உதவியுடன் நிமிா்த்தப்பட்டது. பிறகு இரும்பினால் சாரம், படிகள் அமைக்கப்பட்டு, அதன் மேல் ஏறி உலோக சிற்பிகள் எந்திரங்கள் மூலம் பாலி செய்து, மெருகூட்டி இறுதி கட்ட பணிகளை செய்து முடித்தனா்.
நின்ற கோலத்தில் வடிவமைக்கப்பட்ட தன்வந்தரி பெருமாளின் வலது, இடது கரங்களில் சங்கு, சக்கரம், ஓலைச்சுவடி, அமிா்தகலசம் ஆகியவற்றை தாங்கிய நிலையில் பொலிவான தோற்றத்தில் ஜொலிக்கும் வகையில் அழகுர காட்சி தருகிறாா்.
குறிப்பாக சிற்ப ஆகமவிதிப்படி பிரம்மாண்டமான இச்சிலையை வடிவமைக்க ஓராண்டாகும். ஆனால், சிற்பி ஆா்.ரவீந்திரன் தன்னிடம் உள்ள சிற்பிகளின் தனித்திறமையினால் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 40 நாள்களில் சிலையை வடிவமைத்து சாதனை படைத்துள்ளாா். மாமல்லபுரத்தில் மிக குறுகிய நாட்களில் அதிக உயரத்தில் வடிவமைக்கப்பட்ட பஞ்சலோக சிலை இதுவே ஆகும்.

