/

அனைவருக்கும் கிடைக்காத காப்பீடு

சென்னை, மார்ச் 17: வேன்களில் பயணிக்கும் போது, விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக, நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்கி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:30 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, மார்ச் 17: வேன்களில் பயணிக்கும் போது, விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக, நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்கியுள்ளன.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பள்ளிக் குழந்தைகளை வீட்டில் இருந்து அழைத்துச் செல்லும் பணியில் மேக்ஸி-கேப் வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

மாநிலத்தில், 24 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவையும், சென்னையில் மட்டும் 3,400-க்கும் அதிகமான வாகனங்களும் இயக்கப்படுகின்றன.

சென்னை நகரில் 1,700-க்கும் அதிகமான வாகனங்கள் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்கின்றன. இதற்காக, ரூ.500 முதல் ரூ.1,000 வரை தொலைவுக்கு ஏற்ப மாதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

""பள்ளி பயன்பாட்டுக்காக இயக்கப்படும் வேன்களுக்கு தனியாக உரிமம் ஏதும் கிடையாது. சுற்றுலாவுக்கான உரிமத்தை வைத்துக் கொண்டு இயக்கப்படுகிறது. சுற்றுலா உரிமக் கட்டணமாக காலாண்டுக்கு ரூ.3,500-ஐ போக்குவரத்துத் துறை வசூலிக்கிறது. மேக்ஸி-கேப் வாகனங்களில் 12 பேரை மட்டுமே அழைத்துச் செல்ல முடியும். அது, உரிமக் கட்டணத்துக்கும், டீசல் விலைக்கும் கட்டுபடியாகாது. எனவே, வேன்களில் 25 குழந்தைகள் வரை ஏற்றிச் செல்லப்படுகின்றனர். பயணத்தின் போது, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பாதிக்கப்படும் அனைத்துக் குழந்தைகளுக்கும் காப்பீடு கிடைப்பதில்லை'' என்கிறார் வேன் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி கமலக்கண்ணன்.

காப்பீடு நிறுவனங்களுக்கு...

வேனில் பயணித்து அசம்பாவித சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேருக்கு மட்டுமே காப்பீடு கிடைக்கும்.

""ஒரு வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படும். அந்த எண்ணிக்கையைத் தாண்டி பயணிப்போருக்கு காப்பீடு கிடைக்காது. இதனால், விபத்து போன்றவற்றில் உண்மையாக காயம் அடைந்தவர்களும் கடுமையான மன உளைச்சலுக்குஆளாகின்றனர்'' என்று காப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பள்ளி வேன்களுக்கு தனி உரிமம்...""மேக்ஸி}கேப் வாகனங்களில் அதிகமானோர் பயணித்து அது விபத்துக்கு உள்ளானால், குறைந்த அளவில் காயம் அடைந்தவர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்கி, சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது "பணியை' முடித்துக் கொள்கிறது. அதிக காயம் அடைந்தோர் காப்பீட்டு வரம்புக்குள் (அதாவது வேனில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக பயணித்தோர்) வரவில்லை எனக் கூறி நிராகரித்து விடுகிறது.

இந்தப் பிரச்னை தொடர்பாக, காப்பீட்டு நிறுவனங்களுடன் மோதல் ஏற்பட்டு நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது. சென்னையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன'' என்றார் கமலக்கண்ணன்.

இந்த நிலையில், பாதிக்கப்படும் குழந்தைகள் அனைவருக்குமே காப்பீடு கிடைக்க வேன்களில் இருக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், பள்ளி வாகனங்களுக்கென தனியாக உரிமம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தப் கோரிக்கை மாநில உள்துறையின் பரிசீலனையில் இருப்பதாகவும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.