நூறாண்டு கடந்த தொலைபேசி வாடிக்கையாளர்: பி.எஸ்.என்.எல். பாராட்டி கௌரவம்

கடந்த 102 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து லேண்ட்லைன் (தரைவழி தகவல் வடம்) தொலைபேசி வாடிக்கையாளராக இருந்து வரும் "இந்தியன் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ்' நிறுவனத்தை
102 ஆண்டுகள் கடந்தும் தங்களது தொலைபேசி இணைப்பைத் தொடர்ந்து தக்கவைத்துள்ள வாடிக்கையாளரான, இந்தியன் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகியை கெளரவிக்கும் பிஎஸ்என்எல் சென்னை தலைமைப் பொது மேலாளர
102 ஆண்டுகள் கடந்தும் தங்களது தொலைபேசி இணைப்பைத் தொடர்ந்து தக்கவைத்துள்ள வாடிக்கையாளரான, இந்தியன் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகியை கெளரவிக்கும் பிஎஸ்என்எல் சென்னை தலைமைப் பொது மேலாளர
Updated on
2 min read

கடந்த 102 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து லேண்ட்லைன் (தரைவழி தகவல் வடம்) தொலைபேசி வாடிக்கையாளராக இருந்து வரும் "இந்தியன் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ்' நிறுவனத்தை (இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனம்), பிஎஸ்என்எல் நிறுவனம் பாராட்டி கௌரவித்துள்ளது. 
சென்னை பாரிமுனை, பிரகாசம் சாலையில் உள்ள பிவீ கட்டடம் என்ற முகவரியில் கடந்த ஒரு நூற்றாண்டு கடந்து, இந்தத் தொலைபேசி சேவையை தொடர்ந்து இந்நிறுவனம் பெற்று வருகிறது. இதன் தொலைபேசி எண் 3 இலக்க எண்ணில் இருந்து 8 இலக்க எண் வரை மாற்றம் பெற்றுள்ளது. இதேபோல், பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கைமாறியும் தனது சேவையை மாற்றாமல், இந்தியன் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டிரிஸ் தொடர்ந்து பழமையான வாடிக்கையாளராக தொடர்கிறது. 
இங்கிலாந்தைச் சேர்ந்த ஓரியண்டல் தொலைபேசி நிறுவனம், கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் சில நகரங்களில் தொலைபேசி சேவையை தொடங்கியது. இதில் சென்னையைச் சேர்ந்த சிலர் தொலைபேசி சேவையைப் பெற்றனர். இதில், சென்னை பாரிமுனையில் செயல்படும் "இந்தியன் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் 1915 -ஆம் ஆண்டில் தொலைபேசி இணைப்பைப் பெற்றது. தற்போது, இந்த நிறுவனத்தின் 4 -ஆவது தலைமுறையை சேர்ந்த ரமேஷ் சி.குமார் தலைமை பொறுப்பில் தொடர்கிறார். ஆனாலும், தற்போதுவரை அந்த தொலைபேசி இணைப்பை இந்நிறுவனத்தினர் தக்கவைத்து உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் அந்த தொலைபேசி இணைப்பு கடந்த ஜூலை 11 -ஆம் தேதி 102 -ஆவது ஆண்டை நிறைவு செய்து, 103 -ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
ஓரியண்டல் தொலைபேசி நிறுவனம்... கடந்த 1881 -ஆம் ஆண்டு ஜனவரி 25 - இல் தொடங்கப்பட்ட ஓரியண்டல் தொலைபேசி நிறுவனம், 1923-இல், சென்னை தொலைபேசி நிறுவனத்தின்கீழ் வந்தது. தொலைபேசி நிறுவனம் கைமாறியது மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்ததன் காரணமாக, "இந்தியன் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ்' நிறுவனத்தின் தொலைபேசி எண் பலமுறை மாறியது. 3 இலக்க எண்ணாக இருந்த அதன் தொலைபேசி எண், 1952 - ஆண்டில் "2020' என்ற நான்கு இலக்க எண்ணாக மாறியது. அதன்பிறகு, "21017' என்ற ஐந்து இலக்க எண்ணாக மாறியது. 
கல்மண்டபம் தொலைபேசி நிலையம் அறிமுகமான பிறகு, புதிய எண்ணாக "555021' என்ற ஆறு இலக்க எண் கொடுக்கப்பட்டது. துறைமுக தொலைபேசி நிலையம் வந்த பிறகு "5231477' என்ற ஏழு இலக்க எண் வழங்கப்பட்டது. இறுதியாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி எண்(எட்டு இலக்க எண்) 2002 -இல் இருந்து தற்போது வரை தொடர்கிறது. 
பாராட்டு: கடந்த 102 ஆண்டுகளாக, தொலைபேசி சேவையில் வாடிக்கையாளராக தொடர்கின்ற "இந்தியன் காமர்ஸ் அண்ட் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தை, பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் பாராட்டி கெளரவித்தது.
அப்போது, இந்தியன் காமர்ஸ் அண்ட் இன்டஸ்டிரிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "தொலைபேசி இணைப்புப் பெற்று நூற்றாண்டு கடந்தும் வாடிக்கையாளராக இருப்பது பெருமையாக உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவையில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது' என்றார் அவர்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் (சென்னை பிரிவு) தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி கூறுகையில், "நூற்றாண்டு கடந்தும் வாடிக்கையாளராக தொடர்வதென்பது மிகப்பெரிய விஷயம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கேற்ப, சேவையை மேம்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கம்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com