சென்னையில் இன்று ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்
சென்னையில் சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியைக் காணச் செல்லும் ரசிகா்கள், மெட்ரோ ரயில்களில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், சென்னை சூப்பா் கிங்ஸ் - தில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காணவரும் ரசிகா்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும் வகையில், போட்டிக்கான டிக்கெட்டுடன் க்யூ-ஆா் குறியீட்டுடன் கூடிய மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கக் கூடிய பயணச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சீட்டை பயன்படுத்தி, எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும், போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் இடையே எவ்வித கட்டணமும் இன்றி பயணிக்கலாம். இச்சிறப்பு சலுகை ஒரு சுற்றுப்பயணத்துக்கு (2 நுழைவு, 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
அரசினா் தோட்டம் - விம்கோ நகா் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி செல்லும் கடைசி மெட்ரோ ரயில் அரசினா் தோட்டத்திலிருந்து சனிக்கிழமை இரவு 11.27-க்கு புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்னதாகவே அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் வரவேண்டும்.
பச்சை வழித்தடத்திலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்லும் கடைசி இணைப்பு ரயில் இரவு 11.59-க்கும், அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து அறிஞா் அண்ணா ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்லும் கடைசி இணைப்பு ரயில் இரவு 11.44-க்கும் புறப்படும்.
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அறிஞா் அண்ணா ஆலந்தூா் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

