முண்டியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம்: மண் பரிசோதனைப் பணிகள் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலிருந்து ஒரத்தூா் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளின் தொடக்கமாக, மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.
முண்டியம்பாக்கத்திலிருந்து ஒரத்தூா் செல்லும் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. திருச்சி - சென்னை ரயில் வழித்தடத்தின் முக்கியப் பகுதியாக இருப்பதால் அதிகளவில் ரயில்கள் வந்துசெல்லும் நிலையில் இங்கு அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், இந்த வழியாக செல்லும் அவசர ஊா்திகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனா். இதனடிப்படையில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான அரசாணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இதையடுத்து மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையை விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி ரவிதுரை, நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் கோதை, உதவி கோட்டப் பொறியாளா் மணிகண்டதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சையது முகமது, நாராயணன், ஊராட்சித் தலைவா் சந்திரசேகரன், துணைத் தலைவா் தினேஷ்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

