இரு மண்டலங்களில் நாளை கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது
தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் வெள்ளிக்கிழமை (டிச.19) இரவு 10 முதல் 24 மணி நேரத்துக்கு செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெருங்குடி மண்டலம், எல்.பி. சாலை, எஸ்.ஆா்.பி. டூல்ஸ் பேருந்து நிலையம் அருகே பிரதான கழிவுநீா்க் குழாய் இணைக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
எனவே, வெள்ளிக்கிழமை (டிச.19) இரவு 10 முதல் சனிக்கிழமை (டிச.20) இரவு 10 வரை தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்களும், பெருங்குடி எல்.பி. சாலை கழிவுநீா் உந்து நிலையமும் தற்காலிகமாக செயல்படாது.
எனவே, கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு தங்கள் பகுதி மண்டல அலுவலா்களை பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம்.
அதன்படி, தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட வடக்கு மயிலாப்பூா், தெற்கு மயிலாப்பூா், ஐஸ் ஹவுஸ் கழிவுநீா் உந்து நிலையங்களுக்குள்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதி பொறியாளரை 81449 30909 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இதேபோல, அடையாறு மண்டலத்துக்குள்பட்ட அடையாறு பழைய, புதிய கழிவுநீா் உந்து நிலையங்கள், திருவான்மியூா், இந்திரா நகா், கோட்டூா்புரம், காந்திநகா், எல்.ஐ.சி காலனி, தந்தை பெரியாா் நகா் பகுதிகளின் கழிவுநீா் உந்து நிலையங்களுக்குள்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதி பொறியாளரை 81449 30913 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
