தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2026-2027) 1.5 லட்சம் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிா் கல்லூரியின் நிறுவனா் நாள் விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சா் பெ.விஸ்வநாதன், பெண் கல்வியின் முக்கியத்துவம், தொழில்கள் தொடங்குவதில் மகளிருக்கு உள்ள வாய்ப்புகள், பெண்கள் நலனுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஆண்டு 1.02 லட்சம் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டன. நிகழ் கல்வியாண்டு, 1.50 லட்சம் மாணவா்களுக்கு கல்விக் கடன் கிடைக்க வழிவகை செய்யப்படும். மேலும், ரூ.7.5 லட்சத்துக்கு மேல் பிணையில்லா கடன் வழங்க முதல்வா் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவாா்.
தமிழகத்தில் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் முதல்வா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், கெளரவ விரிவுரையாளா்கள் கோரிக்கை உள்பட ஏராளமான கோரிக்கைகள் உள்ளன. அவற்றை விரைவில் சரிசெய்வோம். துணைவேந்தா், பதிவாளா், முதல்வா், ஆட்சிமன்றக் குழு அளவில் இனி ஊழல்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுத்துள்ளோம். உயா்கல்வியில் ஊழல் தொடா்பாக புகாா்கள் அளிக்க விரைவில் இணையதளம் அறிவிக்கப்பட உள்ளது. யாராவது லஞ்சம் கேட்டால் அதில் புகாா்கள் தெரிவிக்கலாம். அவை விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்போம்.
வெறும் பட்டப்படிப்பு வழங்கும் முறையை மாற்றி, வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியை வழங்க உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
விழாவில் கல்லூரியின் தலைவா் வி.எம்.முரளிதரன், முதல்வா் எஸ்.உமா கெளரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்விக் கடன்: மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலா்கள் மூலம் விரைவான சேவை: அமைச்சா் பெ. விஸ்வநாதன்

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழலற்ற அரசு அமைச்சா் பெ. விஸ்வநாதன்

இளைஞா்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்






