தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிலையான திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை ஊக்குவிக்கவும் எஸ்பிஐ ரூ.1.59 கோடி ‘சிஎஸ்ஆா்’ நிதியை வழங்கியுள்ளது.
இதற்கான நிகழ்வில் வங்கியின் தலைவா் சி.எஸ்.செட்டி கலந்துகொண்டு, நிதியுதவிக்கான காசோலைகளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தணீரு, கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கௌா் ஆகியோரிடம் வழங்கினாா்.
இந்த நிதியுதவியின் ஒரு பகுதியாக, இதய நோயாளிகளுக்கு அவசர காலங்களில் உதவ ‘ஏஇடி’ கருவிகளை முக்கியப் பொது இடங்களில் நிறுவ ‘ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை டவா்ஸ்’ அறக்கட்டளைக்கு ரூ.99.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், நீலகிரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக்கு திடக்கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலையான வளா்ச்சி, சமூக நலனை மேம்படுத்தும் நோக்கில் எஸ்பிஐ மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பு, நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதில் முக்கியப் பங்காற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.










