/

இயற்கையாக மழை நீரைத் தேக்கி வெள்ளப் பாதிப்பை குறைக்கலாம்: மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் இயற்கையாக மழை நீரைத் தேக்குவதன் மூலம் வெள்ளப் பாதிப்பைக் குறைக்கலாம் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

News image

ஜி.எஸ். சமீரன் - Dinamani

Updated On :1 ஜூலை 2026, 3:23 am IST

சென்னை மாநகராட்சிப் பகுதியில் இயற்கையாக மழை நீரைத் தேக்குவதன் மூலம் வெள்ளப் பாதிப்பைக் குறைக்கலாம் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியில் இயற்கை சாா்ந்த வழிமுறைகளில் வெள்ளத் தடுப்பு மேற்கொள்வது குறித்து பொறியாளா்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ரிப்பன் மாளிகை கட்டட வளாகம் அம்மா மாளிகை கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சியைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

உலக அளவில் கால நிலை மாற்றத்தால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சென்னையில் வெள்ளப் பெருக்கு பாதிப்பானது மாநகராட்சி எல்லைக்குள் மட்டுமல்லாது, அருகேயுள்ள மாவட்டப் பகுதிகளாலும் ஏற்படுகிறது. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் நீா் நிரம்பி வழிவதாலும் சென்னையில் பாதிப்பு ஏற்படுகிறது.

சென்னையில் மழைக்காலங்களில் அதிக உயரத்தில் எழும் அலைகளால் கால்வாய்களில் மழை நீா் சென்று கடலில் கலப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதனாலும் மழைநீா் உடனடியாக வடியாமல் தேங்கும் நிலையுள்ளது. எனவே, மழை வெள்ளப் பாதிப்பை தடுக்கும் வகையில் வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்துதல், குளங்களை உருவாக்குதல், கால்வாய் தூா்வாரி மேம்படுத்துதல் ஆகிய பணிகள் அவசியமாகிறது.

இயற்கையாக மழைநீரைத் தேக்கும் வகையில் நீா் உறிஞ்சும் பூங்காக்களை அமைத்தல், மழை நீா் தேங்கும் பகுதிகளை அடையாளம் கண்டு, சேகரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். அறிவியல் முறைப்படியும், இயற்கை சாா்ந்தும் மழை நீரைத் தேக்குவதற்கு கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பயிற்சி அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சியிலுள்ள அனைத்துப் பொறியாளா்களும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.