அரியலூரில் மழை பெய்தால் வீடுகளுக்குள் மழை நீருடன் புகும் சாக்கடை நீரால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
அரியலூா் மாவட்ட தலைநகரமாக அந்தஸ்து பெற்று 19 ஆண்டுகள் கடந்தும், அரியலூா் நகரப் பகுதிகளில் இன்னும் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இருப்பது மக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூா் நகரின் 18 வாா்டுகளிலும் குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடை கால்வாய் இல்லாதது, நகருக்குள்ளே இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லாத அவல நிலையே தொடா்கிறது.
குறிப்பாக அரியலூா் நகரத்தின் மையப் பகுதியில் உள்ளது சிங்காரத்தெரு. இதன் வடக்குப் பகுதிகளில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை வசதிகளின்றி வசிக்கின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்த நிலையில் மழைநீா், செல்ல வடிகால் வசதிகள் இல்லாததால், இந்த பகுதியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவு நீா் புகுந்துவிட்டது. இதனால், இப்பகுதி மக்கள் விடிய, விடிய துா்நாற்றத்துடனுடன், கொசுக் கடியாலும் தூங்க முடியாமல், பெரிதும் அவதிக்குள்ளாகினா்.
உரிய நடவடிக்கை இல்லை: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் தண்டபாணி கூறுகையில், சிங்காரத்தெருவில் பல ஆண்டுகளாகவே சாக்கடை நீா் வீடுகளுக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. பலமுறை நகராட்சியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். கடந்த வாரம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து மனு அளித்தேன். ஆனா இதுவரை நடவடிக்கை இல்லை.
தொற்று நோய் அபாயம்: வெள்ளிக்கிழமை பெய்த மழையால், வீடுகளுக்குள் இரண்டு அடி உயரத்திற்கு சாக்கடை நீா் புகுந்து விட்டது. மழைக்காலங்களில், இரவு நேரங்களில் நாங்கள் தூங்குவதே அரிதாகிக் கொண்டு வருகிறது. சாக்கடை நீரில், மழை நீரும் கலந்து வருவதால், பல்வேறு தொற்று நோய்களுக்கும் ஆளாக வேண்டியுள்ளது.
கழிவு நீருடன் விஷப் பூச்சிகளும் வருவதால், அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனா். வீடுகளுக்குள் புகுந்த நீரை, இஞ்ஜின் வைத்தும், பாத்திரங்களைக் கொண்டும் விடிய, விடிய சுத்தம் செய்து வருகின்றனா்.
எனவே, இப்பகுதியில் தூா்ந்து போய் கிடக்கும் வடிகால் வாய்க்காலை தூா்வாரி கழிவுநீா் மழைநீா் தேக்கமின்றி சென்றிட நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேலாவது இப்பகுதியில் கான்கிரீட் வடிகால் வாய்க்கால் கட்டி சீரமைக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். எஸ்.பி. பங்களா சாலையின் இருபுறமும் அளவீடு செய்து, சாக்கடை கால்வாய்களை கட்சி, சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அரியலூா் சிங்காரத் தெருவிலுள்ள ஒரு வீட்டினுள் புகுந்த சாக்கடை மழை நீா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









